பாகிஸ்தானில் கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் வெளிவரும் உண்மை

பாகிஸ்தானில் பணிபுரிந்து வந்த இலங்கையர் கொடூரமாக கொல்லப்பட்டமைக்கான காரணம் குறித்து அந்நாட்டின் உள்ளூர்வாசிகள் வெளிப்படுத்தியுள்ளதாக மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த நபர் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் அவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் – இ – லபைக் என்ற அமைப்பின் மதப் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதை குறித்த நபர் கிழித்து எறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இதை பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.

உடனே குறித்த அமைப்பைச் சேர்ந்த பெருமளவானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளதுடன், உயிரிழந்த நபரை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கியதுடன் உயிரோடு தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் உயிரிழந்தவர் மிகவும் ஒழுக்கமானவர் எனவும், கடின உழைப்பாளி என அவருடன் நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.