சுவிஸில் இருந்து அனுப்பப்பட்ட பணம்: யாழ்ப்பாணத்தில் இளைஞர்களின் கொடூர சம்பவம்

அயல் வீட்டில் இருந்தவருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சுவிஸில் இருந்த நபர் ஒருவர் வழங்கிய பணத்துக்காக தாக்குதல் மேற்கொண்ட இருவரை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உடுவில் அம்பலவாணர் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த பெறுமதியான பொருள்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு அருகில் காணப்பட்ட சிசிரிவி காட்சிகளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்தனர்.

இதனடிப்படையில் மானிப்பாய் பகுதியில் சந்தேக நபர்கள் இருவர் இன்று கைது செய்யப்பட்டனர். அவர் சம்பவத்தின் போது பயன்படுத்திய வெகோ மோட்டார் சைக்கிள் மற்றும் வாள் ஒன்றினையும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.

இச்சம்பவம் காணிப் பிரச்சினை ஒன்றில் அயல் வீட்டுகாரருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்.மானிப்பாயை சேர்ந்த ஒருவருக்கு சுவிஸில் வசிக்கும் நபர் ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து அயல் வீட்டிற்கு பெற்றோல் குண்டு வீசி வீட்டை சேதப்படுத்தி அச்சுறுத்தல் விடுக்குமாறு கேட்டுள்ளார்.

பின்னர் மானிப்பாயை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பணம் வந்ததை அடுத்து அவர் தன்னுடன் உள்ள இளைஞர்களை கூட்டி சென்று சம்பவத்தை மேற்கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் உள்ளனர். அவர்களையும் கைது செய்ய யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் விசாரணையின் பின்னர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.