இரத்த கரை படிந்த கையுறைகளை ஏற்றுமதி செய்த நாடு!

கொரோனா காலகட்டத்தில் கையுறைகள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி தாய்லாந்து நிறுவனங்கள் சில பயங்கர மோசடி ஒன்றில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மியாமியைச் சேர்ந்த தொழிலதிபரான Tarek Kirschen என்பவர், தாய்லாந்து நிறுவனமான Paddy the Room என்ற நிறுவனத்திலிருந்து 2 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான கையுறைகளை இறக்குமதி செய்துள்ளார். அவற்றை அவர் மற்ற டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு விற்றுள்ளார்.

ஆனால், அவரிடம் கையுறை வாங்கிய பலர், அந்த கையுறைகள் புதியவை அல்ல, அவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவை, அவற்றை கழுவி சாயமேற்றி புதிதுபோல் ஏமாற்றியிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்கள். சிலர், அவற்றில் இரத்தக்கரை கூட இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே, அந்த கையுறைகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்திருக்கிறார் Tarek.

அத்துடன், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடமும் இந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார் அவர்.

இதேபோல் Louis Ziskin என்பவரும் 2.7 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான கையுறைகளை வாங்கியுள்ளார். அவை போலியானவை என தெரியவந்ததும், தான் கொடுத்த பனத்தைத் திருப்பி வாங்க நேரடியாக அவர் தாய்லாந்துக்கே சென்றுவிட்டார். ஆனால், சம்பந்தப்படவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது தாக்கியதாகவும், கடத்தலில் ஈடுபட்டதாகும் கூறி தாய்லாந்து பொலிசார் அவரைக் கைது செய்துவிட்டார்கள்.

பிறகு தாய்லாந்து பொலிசார் Paddy the Room நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு போலி கையுறைகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள் சாயமேற்றப்பட்டு வேறொரு நிறுவனத்தின் பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதைக் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றியுள்ளார்கள், அந்த சேமிப்பக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், Paddy the Room நிறுவனம் மீண்டும் வேறொரு இடத்திலிருந்து தன் ஏற்றுமதியைத் தொடர்கிறது.

இதற்கிடையில், அப்படி பெறப்பட்ட கையுறைகள் எத்தனை மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டனவோ என்பது தெரியவில்லை. அதைவிட பயங்கரம், அந்த கையுறைகள் உணவகங்களுக்கும் விற்கப்பட்டுள்ளனவாம்.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட அந்த கையுறைகளால் யாருக்கெல்லாம் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டதோ தெரியாது!