யாழ் மாவட்ட மக்களுக்கு யாழ்.எஸ்.எஸ்.பி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு பொதுமக்கள் உட்பட அனைவரின் ஒத்துழைப்பு வேண்டுமென யாழ்ப்பாண எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (24) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினால் யாழ்.நகரை சுத்தமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

யாழில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே யாழ்ப்பாண எஸ்.எஸ்.பி இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவித்தது,

யாழ்.நகரமானது ஒரு மிகவும் அழகான நகரம் அந்த நகரத்தினை தொடர்ந்து அழகுற வைப்பதற்காகவே இன்றைய தினம் பொலிஸாரால் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எங்களுடைய வேலைத் திட்டத்திற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

யாழ்ப்பாண மக்கள் தாம் பாவித்து விட்டு எறியும் கழிவுப் பொருட்களை அந்தந்த இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டால் நகரம் சுத்தமாக பேணப்படும்.

இலங்கையில் எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பொலித்தீன் பாவனையினால் பாதிப்பு ஏற்படகூடிய நிலைமை காணப்படுகின்றது. பொதுமக்கள் தாம் பயன்படுத்தும் பொலித்தீன் கழிவுகளை பொலித்தீன் கழிவு கொட்டும் இடங்களில் போடுவதன் மூலம் யாழ்.நகரை எப்போது தூய்மையாக வைத்திருக்க முடியும்.

பொலித்தீன் பாவனை தொடர்பில் பொதுமக்கள் சற்று விழிப்புடன் செயற்படவேண்டும். இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத் திட்டமானது தொடர்ச்சியாக யாழ் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் பொலிஸாரின் செயற்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி எமது நகரத்தை சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.