அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பீ கூறியிருந்தார்.
அவரின் அந்த அறிவிப்பை தொடர்ந்தே தலிபான்கள் குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாகித் கூறுகையில்,
‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க ஆளில்லா விமானங்களால் ஆக்கிரமிக்கப்படுவதால் அனைத்து சர்வதேச உரிமைகள், சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிபாட்டை அமெரிக்கா மீறுவதை சமீபத்தில் பார்த்தோம்.
இந்த மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் தடுக்கப்பட வேண்டும் என்றூ, இல்லையெனில் அமெரிக்கா மோசமான எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் கூறினார்.