யாழ்ப்பாணத்தில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை மேற்கு – கண்ணகி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் இருந்து பட்டபகலில் இரண்டரை பவுண் நகை திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில் அவர்களது வீட்டில் இருந்த இரண்டரை பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வீட்டில் வைத்த நகைகளை இன்றைய தினம் வீட்டினர் பார்த்தபோது, நகைகள் வைத்த இடத்தில் இல்லாத நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸார் சி.சி.டிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பேரில் ஒருவரை இன்று கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது சந்தேக நபர் தானே நகைகளை திருடியதாகவும், அவற்றில் இரண்டு பவுண் நகை நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், மிகுதி அரைப் பவுண் நகை தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்து பொலிஸாரிடம் அதனை கையளித்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மூளாய் வேரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க நபர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவருடன் இணைந்து திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட இன்னொரு நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.