சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா… முக்கிய தகவல்!

சீனாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் கொரோனா பரவல் தலைகாட்டத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்ட தொடங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 22 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தவிர 27 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்றுப் பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை.

தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,394 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.