கிளிநொச்சியில் இரவில் கணவன் – மனைவி பரிதாப மரணம்!

பூநகரி ஜெயபுரத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் நிர்வாகக் கிராம அலுவலகரும் அவரது மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் துயரச் சம்பவம் நேற்று இரவு 8.10 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் முழங்காவில்லை வசிப்பிடமாகவும் கொண்ட பூநகரி பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலகர் பாலசிங்கம் நகுலேஸ்வரன மற்றும் அவரது மனைவி சுனித்தா ஆகிய இருவருமே உயிரிழந்தனர்.

கிராம அலுவலகர் சம்பவ இடத்திலும், அவரது மனைவி கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

கடும் காற்றுக் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுவதை கண்ணுற்ற கிராம அலுவலகர் மோட்டார் சைக்கிளில் விலத்தி செல்ல முற்பட்ட போது பின்னே சென்ற டிப்பர் வாகனம் மோதித் தள்ளியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் வாகனங்கள் எவையும் காணப்படவில்லை என்றும் விபத்தா அல்லது யானை தாக்கியதா என்று தெரியவில்லை எனவும், அதனால் இரண்டு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக ஜெயபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஜெயபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.