கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 2 குழந்தைகளை கொன்ற தாய்! வெளியான தகவல்!

உப்பள்ளி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 2 குழந்தைகளை கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து உப்பள்ளி கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு

உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி அயோத்தியா நகரைச் சேர்ந்தவர் பரசுராமன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமா என்ற ஜெயசித்ரா (வயது 28). இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருந்தனர்.

பிரேமாவுக்கு, அதேபகுதியைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் கணவர் வேலைக்கு சென்றதும் பிரேமா, தனது கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இதற்கிடையே பிரேமாவின் கள்ளக்காதலுக்கு 2 குழந்தைகளும் இடைஞ்சலாக இருந்துள்ளது. இதையடுத்து கள்ளக்காலுக்கு இடையூறாக இருக்கும் தனது 2 குழந்தைகளையும், பிரேமா கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

2 குழந்தைகள் கழுத்தை…

அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 11-ந்தேதி இரவு வீட்டில் பிரேமா, கணவர் பரசுராமன், அவர்களது 2 குழந்தைகள் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது கல்நெஞ்சம் கொண்ட பிரேமா, தூங்கி கொண்டிருந்த 2 குழந்தைகளையும் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் பரசுராமன், மனைவி மீது பழைய உப்பள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை கைது செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாய்க்கு ஆயுள் தண்டனை

இதுதொடர்பாக உப்பள்ளி ஓசூர் 5வது செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஸ்ரீதேவேந்திரப்பா பிராதார் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார்.

அதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதாக பெற்ற 2 குழந்தைகளை பிரேமாவே கொலை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளை கொன்ற குற்றத்திற்காக பிரேமாவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.