கொரோனாவை தொடர்ந்து முக்கியமான 3 நோய்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் மாடர்னா!

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை தொடர்ந்து HIV, நிபா வைரஸ் உள்ளிட்ட மிக முக்கியமான நோய்களுக்கான தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணியில் அமெரிக்க நிறுவனமான மாடர்னா ஈடுபட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தற்போது உலகளவில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டு mRNA அடிப்படையிலான தடுப்பூசிகளில் ஒன்றினை அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னா உருவாக்கியது.

கொரோனாவுக்கு எதிராக 95 சதவீதம் செயல்திறன் கொண்ட மோடெர்னாவின் தடுப்பூசி அமேரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயணப்படுத்த தொடங்கியுள்ளன. மேலும் பல நாடுகளில் அதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்காக கமாடர்னா காத்திருக்கிறது.

இந்நிலையில், 2021-ஆம் ஆண்டில் 3 புதிய தடுப்பூசிகளுக்காக மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடரப்போவதாக மாடர்னா திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

இது உலகை பல ஆண்டுகளாக அச்சுறுத்திவரும் எச்.ஐ.வி., பருவகால காய்ச்சல் (சளி) மற்றும் நிபா வைரஸ் ஆகிய நோய்களுக்கான mRNA தொழில்நுட்பத்தைக் கொண்டு தடுப்பூசி கண்டுபிடிக்கும் திட்டங்களாகும்.

மேலும், வயதானவர்களுக்கான சுவாச ஒத்திசைவு வைரஸ் (respiratory syncytial virus) தடுப்பூசி திட்டத்தை விரிவுபடுத்துவதாகவும் மாடர்னா அறிவித்துள்ளது.

மாடர்னாவின் புதிய திட்டங்கள் பருவகால காய்ச்சலை மட்டுமல்ல, வழக்கமான காய்ச்சல் (சளி) மற்றும் கொரோனாவுக்கு வழிவகுக்கும் SARS-CoV-2 வைரஸ் ஆகிய இரண்டையும் குறிவைக்கக்கூடிய ஒரு கூட்டு தடுப்பூசியையும் தயாரிக்கவுள்ளதாக மாடர்னா அறிவித்துள்ளது.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு நேர்மறையான முடிவுகள் கிடைத்ததையடுத்து, மாடர்னாவால் இனி கண்டுபிடிக்கப்படவுள்ள புதிய தடுப்புமருந்துகளுக்கு நம்பிக்கையுடன் கூடிய பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.