தெற்கு ஜார்ஜியா தீவை நோக்கி மோத வரும் உலகின் மிகப் பெரிய பனிப்பாறை!

தென் ஜார்ஜியா தீவுடன் விரைவில் மோதக்கூடிய ஒரு மாபெரும் பனிப்பாறையை பற்றி ஆராய விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

A-68A பனிப்பாறை உண்மையில் உலகின் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. இது 2017-ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் உள்ள Larsen C ice shelf-ல் இருந்து பிரிந்து, பிரித்தானியாவின் தொலைதூர தேசமான தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

டிரில்லியன் டன் எடையில், கிரேட்டர் லண்டனை விட கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியதாக உள்ள இந்தப் பனிப்பாறை, Royal Air Force-ஆல் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

தென் ஜார்ஜியாவைச் சுற்றியுள்ள ஆழமற்ற நீரில் பனிப்பாறை சிக்கித் தவிக்கும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர், இது மொல்லஸ்க்கள், ஓட்டுமீன்கள் மற்றும் பிற உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழு, ஜனவரி மாதம் ஆராய்ச்சி கப்பலான ஆர்ஆர்எஸ் ஜேம்ஸ் குக் அப்பனிப்பாறைக்கு செல்கிறது.

பனிப்பாறையைச் சுற்றியுள்ள உயிரினங்களைப் படிக்கவும், வெப்பநிலை மற்றும் பிளாங்கன் அளவுகள் போன்றவற்றை அளவிட ரோபோ நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பனிப்பாறை மோதும் போது சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு அவர்கள் இந்த தகவலைப் பயன்படுத்தவுள்ளனர்.

பனிப்பாறை இன்னும் சிறிது காலம் கரையொதுங்காது என்ற நிலையில், இதனால் என்ன நடக்கும் என்று விஞ்ஞானிகளுக்கு கணிப்பது தற்போது மிகவும் கடினம். அது தரையில் இருந்தால் பனி உருக ஒரு தசாப்தம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.