காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் சில்லி நண்டு எப்படி செய்வது!!

நண்டு கடல் உணவுகளில் பெரும்பாலானவர்கள் விரும்பி உண்ணும் ஒரு வகை உணவாக உள்ளது.

நண்டில், அத்தியாவசிய கொழுப்பு, ஊட்டச்சத்து மற்றும் கனிமங்கள் அதிக அளவில் உள்ளது.

நண்டில் அதிக அளவு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், குறிப்பாக கண் பார்வை, இதயம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் இதன் பங்கு பெருமளவில் உள்ளது.

அந்தவகையில் சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடக்கூடிய காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் சில்லி நண்டு எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • நண்டு – அரை கிலோ
  • பூண்டு – 10 பல்
  • உப்பு – தேவையான அளவு
  • தக்காளி – 2
  • சர்க்கரை – ஒரு மேசைக்கரண்டி
  • சோளமாவு – 2 மேசைக்கரண்டி
  • அஜினோமோட்டோ – ஒரு சிட்டிகை
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
  • மிளகாய் விழுது – 2 மேசைக்கரண்டி
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • வினிகர் – ஒரு மேசைக்கரண்டி
  • முட்டை – ஒன்று
செய்முறை

கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தக்காளி நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

நண்டை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கின பூண்டினைப் போட்டு வதக்கவும்.

அத்துடன் மிளகாய் விழுதினைச் சேர்த்து வதக்கி பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்தவுடன் அதில் சுத்தம் செய்த நண்டுகளைப் போட்டு வேகவிடவும். நீரின் அளவு, நண்டு துண்டங்கள் முழுவதும் நனையும் அளவிற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

அடுத்து அதில் தக்காளி விழுது, சர்க்கரை, வினிகர், இவையனைத்தையும் கொதிக்கும் குழம்பில் போடவும்.

ஒரு சிட்டிகை அஜினோமோட்டோ மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.

சுமார் 10 நிமிடங்கள் வெந்த பிறகு, குழம்பினைக் கெட்டியாக்க அதில் சோளமாவினைச் சேர்க்கவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்து, அதனையும் குழம்பில் சேர்க்கவும்.

சற்று நேரத்தில் குழம்பு கெட்டியானவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவும்.