யாழில் இளம் யுவதி கடத்தல்!

யாழ்.கொடிகாமம் பகுதியில் பெண் ஒருவரை கடத்தி சென்று ஒரு மணி நேரத்தின் பின்னர் விடுவித்துள்ள சம்பவத்தில்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சகோதரர் தொடர்பு பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொடிகாமம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து யுவதியை கடந்த முயன்றுள்ளனர்.

இதன்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் யுவதியை வாள் முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

உடனடியாக சம்பவம் தொடர்பில் வீட்டார் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்த போதிலும் நேரில் வந்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் அடிப்படையில் அவர்கள் பொலிஸ் நிலையம் செல்ல முயன்ற போது, யுவதியை கடத்தி சென்றவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்தில் யுவதியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது அங்கு முறைப்பாட்டை ஏற்கும் பிரிவில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் “யுவதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால் இதனை கடத்தல் என முறைப்பாடு செய்ய முடியாது.

ஊரடங்கு நேரத்தில் உங்கள் வீட்டிற்குள் வந்தார்கள் என்றே முறைப்பாடு வழங்க முடியும். இதனை பெரிதுபடுத்தாமல் விடுங்கள்” என எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார்.

அதன் பின்னரே குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சகோதரன் முறையானவரின் தலைமையில் சென்ற குழுவினரே குறித்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் விபரம் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.

தற்போது யுவதியின் பெற்றோர் குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கோ தமது பிள்ளைக்கோ எதிர்காலத்தில் ஆபத்து நேரிடலாம் எனும் அச்சத்தில் உள்ளனர் என்று தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.