யாழில் விசேட தேவை உடையவரை தாக்கிய பொலிஸார் !

இரண்டு கால்களையுமிழந்த விசேட தேவையுடையவரை பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்து அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24ஆம் திகதி கிரீமலை பகுதியில் இரவு 11 மணியளவில் ஊரடங்கு நடைமுறையில் இருந்த வேளை இரு குழுக்களுக்கு இடையில் மோதல் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவதை அடுத்து அவ்விடத்திற்கு விசாரணைக்காக வந்திருந்த காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் மு.உதயானந்தன் (வயது 35) தலைமையிலான பொலிஸ் குழுவினர் மோதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்ய முயன்றனர்.

அப்போது , உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

வாள் வெட்டுக்கு இலக்கான உப பொலிஸ் பரிசோதகரை ஏனைய பொலிஸார் அங்கிருந்து மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றதுடன் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மேலதிக பொலிஸார், உப பொலிஸ் பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் சிறப்புத் தேவையுடையவரை கைது செய்திருந்தனர்.

எனினும் கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்திருந்தார்.

இந்த நிலையிலையே, அன்றைய தினம் இரவு தம்மை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தடியால் மூர்க்கத்தனமாக தாக்கியதாகவும் , சம்பவத்துடன் தொடர்பில்லாத தன்னை பொய் குற்றசாட்டு சுமத்தி கைது செய்து தாக்கி சித்திரவதை புரிந்ததாக பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் அவர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.