இலங்கை மக்களை பாதுகாக்க மீண்டும் கிரிக்கெட் அணி செய்த நற்செயல்!

கொரோனாவை எதிர்த்து போராடி வரும் ஹோமகாமா மருத்துவமனைக்கு இலங்கை கிரிக்கெட் அணி நன்கொடை வழங்கியுள்ளது.

ஹோமகாமா மருத்துவமனை சுகாதார ஊழியர்களுக்காக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்க நிதி மானியம் வழங்கப்பட்டது.

கொரோனா அறிகுறிகளுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மையமாக இயங்கும் மருத்துவமனையின் வேண்டுகோளைத் தொடர்ந்து இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி இந்த நன்கொடை அளித்தது.

சந்தேகத்திற்குரிய கொரோனா நோயாளிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பிற்கு இந்த தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படத்தப்படும் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமகாமா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜனிதா ஹெட்டியராச்சி அவர்களிடம் அணித்தலைவர் கருணாரத்ன நன்கொடை வழங்கினார்.

இந்த கொடிய வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு ஒவ்வொரிடமிருந்தும் பங்களிப்பு தேவைப்படும், நாட்டிற்கு உதவ இந்த நேரத்தில் விளையாட்டு பிரமுகர்கள் முன்வருவது எங்கள் கடமையாகும் என்று கருணாரத்ன கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு, இலங்கை கிரிக்கெட் குழு கொழும்பு பொது மருத்துவமனைக்கு வீடியோ லாரிங்கோஸ்கோப்பை வாங்க நிதி வழங்கியது, இது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் முதன்மை மருத்துவ உபகரணங்கள் ஆகும்.