இன்றைய காலத்தில் பெண்களுக்கு பல வேலைகள் இருக்கிறது. அதனால் பலருக்கு சமைக்கும் திறன் ஓரளவுக்கு தான் உள்ளது.
இந்த துரிதமான வாழ்க்கையில் உணவிற்கு நாம் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மேலும் நாம் அவசரமாக சமைக்கும் உணவுகள் ருசியாகவும், சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது என்றுக் கேட்டால் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.
அந்த வகையில் இன்று நாம் அசத்தலான சமையல் செய்வதற்கான சில குறிப்புகளை பற்றி பார்ப்போம்.
சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
சேமியா பாயசம் செய்யும்போது, அவை குழைந்து போய்விட்டால், அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.
குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால், ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்தால் மென்மையாகிவிடும்.
அடை, வடை, தோசை செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென்றிருக்கும்.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
கேழ்வரகை ஊற வைத்து, பிறகு அவற்றை அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
வெண்டைக்காயை பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சிறிதளவு சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.