ஹிட்லரின் வீடு, பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது

ஹாலோகாஸ்ட் என்ற நடவடிக்கை மூலம் பல லட்சம் யூதர்களை கொன்ற, இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை பொலிஸ் நிலையமாக மாற்றுவதற்கு ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

ஆஸ்திரியாவின் ‘ப்ரனவ் ஆம் இன்’ எனும் நகரிலுள்ள, 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில்தான் ஹிட்லர் தனது வாழ்வின் முதல் சில வாரங்களை வாழ்ந்தார்.

இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கும் அரசுக்கும் நடந்த மிக நீண்ட சட்டப்போராட்டத்தின் முடிவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹிட்லரின் இந்த கட்டடத்துக்கு வாடகை கொடுத்து பாதுகாத்து வந்த அரசாங்கம், இதே இடத்தில் அகதிகளுக்கான மறுவாழ்வு மையம் அமைப்பதற்கும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவதற்கும், செப்பனிடுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளை அந்த கட்டடத்தின் உரிமையாளர் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் இந்த இல்லத்தை 8,10,000 யூரோக்களுக்கு அரசு கையகப்படுத்தியது.

அதன் பிறகு, இந்த கட்டடத்தை இடித்து விட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறுபட்ட கருத்துகளை முன்வைத்து வந்த நிலையில், தற்போது இதை பொலிஸ் நிலையமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.