சுவையான சோயா ரைஸ் செய்வது எப்படி ?

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் இந்த சோயா ரைஸ் சூப்பரான மதிய உணவாகும். இப்போது இந்த சோயா ரைஸ் செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

உதிரியாக வடித்த சாதம் – 4 கப்
மீல்மேக்கர் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 4
கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

தாளிக்க :

பட்டை – 1 துண்டு
இலவங்கம் – 2
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

முதலில் தக்காளி, வெங்காயம், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு கலந்து, மீல்மேக்கர் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைத்து, தண்ணீரை வடித்து எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொள்ளவும்.

பிறகு காய்ந்த மிளகாயை 1 கப் வெந்நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம் சேர்த்து தாளிக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்த மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு பொரித்த மீல்மேக்கர், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

கடைசியாக அனைத்தும் நன்றாக சேர்ந்து வரும் போது சாதம் சேர்த்து கலந்து அடுப்பை அணைக்க வேண்டும். பின் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறினால், சுவையான சோயா ரைஸ் தயார்!!!