பாகிஸ்தானை சொந்த மண்ணில் வெற்றி பெற்ற இலங்கை!

ரி20 தர வரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானுடனான மூன்றாவது ரி 20 போட்டியிலும் வெற்றி பெற்று, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வைத்து வெள்ளையடித்தது இலங்கை.

இன்று நடந்த மூன்றாவது ஆட்டத்தில் 13 ஓட்டங்களால் இலங்கை வென்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அறிமுக ரி 20 போட்டியில் ஆடிய ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். அஞ்சலோ பெரேரா 13 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் சொய்ல் 52 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹசரங்க தெரிவானார்.