விநாயகர் சிலை கரைக்க சென்ற 6 சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!

கடந்த வாரம் 2 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விழா முடிந்ததையடுத்து ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல நீரில் கரைக்க சென்ற  6 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியானது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தங்கவயலில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது எதிர்பாராத விதமாக ஏரியில் மூழ்கி 6 சிறுவர்கள் பலியானார்கள்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போட்டிருந்த தடுப்புகளையும் மீறி சில சிறுவர்கள் சிலையை எடுத்துக் கொண்டு ஏரிக்குள் இறங்கிய போது, ஆழமாக தூர் வாரப்பட்ட இடத்திற்கு சென்றவர்கள் சிலையின் எடை காரணமாக அழுத்தப்பட்டு நீருக்குள் மூழ்கினர்.

இந்த துயர சம்பவத்தில் 6 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாக மேலும், 2 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.