தாக்குதலில் கொல்லப்பட்ட 3 குழந்தைகளையும் பார்த்து கதறி அழும் தந்தை!

சிரியாவில் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று குழந்தைகளையும் பார்த்து ஒரு தந்தை கதறி அழும் நெஞ்சை உருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் ஆதரவுடன் சிரிய அரசாங்கப் படைகள் இட்லிப் மாகாணத்தைக் கைப்பற்ற தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 3 மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பகுதியின் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால், உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக பலரும் தப்பி ஓடிவருகின்றனர்.

இந்த நிலையில் புதன்கிழமையன்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வரும் இப்பகுதியில், ரஷ்ய மற்றும் சிரிய படைகள் அல்கொய்தா படைகளை ஒழிக்க முயற்சிப்பதாக தெரிவித்து வருகின்றன.

மாரெட் அல்-நுமன் நகரில் புதன்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் ஒரு தந்தை தனது மூன்று இளம் குழந்தைகளை பறிகொடுத்து, அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தலையில் கைவைத்து அழுகிறார். நெஞ்சை உருக்கும் இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.