பறிபோன சொகுசு வாழ்க்கை: இரட்டையர்களை கொன்ற பிரித்தானிய தாயார்!

பிரித்தானியாவில் இளம் தாயார் ஒருவர், திடீரென்று சொகுசு வாழ்க்கையை இழந்த மனத் துயரத்தில் தமது பிள்ளைகள் இருவரை கொன்று தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடியிருந்து வந்த 38 வயதான சமந்தா ஃபோர்டு என்பவரே, மன உளைச்சலால் தமது 23 மாத இரட்டையர்களை குளியல் அறையில் வைத்து கொலை செய்தவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சென்ற ஒரு கார் லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், அந்த வாகனத்தில் சிக்கியிருந்த பெண்மணியை மீட்டுள்ளனர்.

அவரது பெயர் சமந்தா ஃபோர்டு எனவும், அந்த விபத்து தற்கொலை முயற்சி எனவும் விசாரணையில் தெரியவந்தது.

மட்டுமின்றி, தமது வாழ்க்கை தொலைந்துவிட்டது எனவும், தமது பிள்ளைகளை கொன்றுவிட்டதாகவும் விபத்தில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சமந்தா ஃபோர்டு உளறியுள்ளார்.

இத்தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார் உடனடியாக அவரது குடியிருப்புக்கு விரைந்தனர். அங்கே குளியலறையில் 23 மாத பிராயமேயான இரட்டையர்களின் சடலம் மீட்கப்பட்டது.

இதனையடுத்து சமந்தா மீது பொலிசார் தற்கொலை முயற்சி, திட்டமிட்டு கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகலில் வழக்குப் பதிந்தனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதன் முதலாக ஸ்டீவன் ஃபோர்டை சந்தித்துள்ளார் சமந்தா. இருவரும் ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இந்த நிலையில் வேலை நிமித்தம் 2008 ஆம் ஆண்டு கட்டார் நாட்டுக்கு ஃபோர்டு தம்பதிகள் குடிபெயர்ந்தனர்.

அங்கே சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சமந்தா, செயற்கை முறைப்படி இரட்டையர்களுக்கு தாயானார்.

இந்த நிலையில் கட்டார் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு பிரித்தானியாவுக்கு திரும்பியுள்ளனர். அதுவரை ஆடம்பர சொகுசு வாழ்க்கையை அனுபவித்த சமந்தாவுக்கு பிரித்தானியாவில் சாதாரண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக ஃபோர்டு தம்பதிகள் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஸ்டீவன் விவாகரத்து பெற்று பிரிந்து சென்றுள்ளார்.

இதனால் கடுமையாக மனமுடைந்த சமந்தா தமது பிள்ளைகளை கொன்று தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்போது இந்த வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் எதிர்வரும் 16 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.