கணவனுக்கு மரண தண்டனை அளிக்க கோரும் மனைவி!

கர்ப்பிணிப்பெண் ஒருவர் தனது கணவனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார், அதற்கு காரணம், கர்ப்பிணி என்றும் பாராமல் அவரது பணத்திற்காக அவரை 110 அடி உயர மலையுச்சியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றிருக்கிறார் அந்த கணவர்.

மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த சீனப்பெண்ணான Wang Nan (32), தனது கணவனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது, 111 அடி உயர மலையின் விளிம்பிலிருந்து கீழே விழுந்தார்.

அவரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் தன் கணவனிடம், ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று சீன மொழியில் கூறுவதை மொழிபெயர்ப்பாளர் ஒருவர் கவனித்திருக்கிறார்.

அத்துடன் மனைவி பள்ளத்தில் விழுந்து கிடக்கும்போது, மற்றவர்கள் எல்லாம் பதறி ஓடிச் சென்று அவரை காப்பாற்ற முயலும்போது, Wang Nanஇன் கணவரான Yu Xiaodong (33) மட்டும் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.

ஆக, இவை அனைத்தும் பொலிசாருக்கு சந்தேகத்தை உண்டு பண்ண, அவர்கள் Wang Nanஐ விசாரித்துள்ளனர்.

அப்போது தனது கணவர் சூதாடி, பயங்கர கடனில் இருப்பதாகவும், அதனால் தனது பணத்தை அடைவதற்காக தன்னை கொல்ல முயன்றதாகவும் தெரிவித்தார் Wang Nan.

சுமார் 2.5 மில்லியன்களுக்கு சொந்தக்காரரான Wang Nanஇடம் தனது கடனை அடைக்க Xiaodong பணம் கேட்க, அவர் பாதிப்பணம்தான் தருவேன் என்று கூறிவிட, அவரை எப்படியாவது கொலை செய்ய முடிவு செய்துள்ளார் Xiaodong.

அதற்காக தன்னை தனது கணவர் பல முறை பல உயரமான இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கும் Wang Nan, தனது கணவருக்கு உயரம் என்றாலே பயம் என்பதால் தனக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.

பல வாரங்கள் சிகிச்சைக்குப்பின் இப்போது தனது வலது கையை அசைக்க முடிவதோடு, பேசவும் முடிகிறது என்றாலும், தனது கால்களை அசைக்க முடியவில்லை என்கிறார் Wang Nan.

அவர் என்னை மட்டுமல்லாது என்னுடைய வயிற்றிலிருக்கும் எனது குழந்தையையும் கொல்லப்பார்த்தார், ஆகவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அவர்.