தந்தையுடன் வாழ ஆசைப்பட்ட மகள், கல்லறை வாங்க வேண்டிய நிலைமைக்கு ஆளான தந்தை!

அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் சமீபத்தில் உயிரிழந்த தந்தையும் மகளும் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பிணமாக கரையொதுங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடன் வாழ ஆசைப்பட்ட மகளுக்கு கல்லறை வாங்கும் சூழலுக்கு ஆளாகியுள்ள ஒரு தந்தை குறித்த செய்தி வெளியாகி மனதை நெகிழச் செய்துள்ளது.

ஹோண்டூராசைச் சேர்ந்த Manuel Gámez, தனது மகள் இரண்டு வயது குழந்தையாக இருக்கும்போது அவளது தாய் அவளை கைவிட்டு செல்ல, எப்படியாவது மகளுடன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட வேண்டும் என தொடர்ந்து முயன்று வந்திருக்கிறார்.

தனது பெற்றோரிடம் தனது மகள் Heydi Gámez Garcíaவை விட்டு விட்டு, அமெரிக்காவுக்கு ஆவணங்கள் எதுவுமின்றி புலம்பெயர்ந்தவராக சென்ற Manuel, பல ஆண்டுகள் கடினமாக உழைதிருக்கிறார்.

அவரது சகோதரி அமெரிக்காவில் Long Islandஇல் புகலிடம் பெற்று குடியமர, 2014ஆம் ஆண்டு சொந்த நாட்டில் அவரது தந்தை கொல்லப்பட்டதால் ஹோண்டூராசுக்கு திரும்பியிருக்கிறார் Manuel.

ஒரு பெண் குழந்தையை தனது நாட்டில் வளர்ப்பது ஆபத்தனாது என்பதால், Heydiயை அமெரிக்காவிலிருக்கும் தனது சகோதரியிடம் அனுப்பி வைக்க, அவளுக்கு 2016இல் புகலிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

தாயில்லாப் பிள்ளையான தனது மகளுடன் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று அமெரிக்க மெக்சிகோ எல்லையை மூன்று முறை கடந்திருக்கிறார் Manuel.

முதல் இரண்டு முறையும் பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறை, தான் எப்படியாவது Heydiயைக் காண வருவதாக அவளுக்கு செய்தி அனுப்பியிருக்கிறார், ஆனாலும் அந்த முறையும் அவரால் அமெரிக்காவுக்குள் நுழைய முடியவில்லை.

நான்கு ஆண்டுகளாக தந்தையைக் காண முடியாத மன உளைச்சலில் இருந்த Heydi, தந்தையின் முயற்சிகள் ஒவ்வொரு முறையும் தோல்வி அடைவதைக் கண்டு மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறாள்.

அப்பா இல்லாமல் அமெரிக்காவில் வாழ்வதை விட பேசாமல் ஹோண்டூராசுக்கே போய்விடலாமா, அப்பா இல்லாமல் வாழ்வதில் அர்த்தமே இல்லை என்று தனது அத்தையான Jessica Gámezஇடம் கூறியிருக்கிறாள் Heydi.

இந்நிலையில் ஒருநாள், இனி அப்பாவுடன் சேருவேன் என்னும் நம்பிக்கை போய்விட்டது என கண்ணீருடன் அத்தையிடம் கூறிய Heydi, சற்று நேரம் தனியாக இருக்க விரும்புவதாக தெரிவித்துவிட்டு, தனது அறைக்குள் சென்றிருக்கிறாள்.

பின்னர் தனது உடைகளை வைக்கும் ஷெல்புக்குள்ளேயே ஒரு வயரில் தூக்கு போட்டுக் கொண்ட நிலையில் அவளைக் கண்ட அவளது அத்தை, உடனடியாக அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அங்கு மருத்துவர்கள் அவள் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வளவு நாள் அவளது தந்தைக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்து வந்த அமெரிக்கா, இப்போது தனது மகளைப் பார்ப்பதற்கு அவருக்கு அனுமதியளித்துள்ளது. ஆனால் அவர் வந்திருப்பதை அவளால் பார்க்க முடியாது.

செயற்கை சுவாசக் கருவிகளுடன் இணைக்கப்பட்டுள்ள Heydiயின் அருகில் கண்ணீர் மல்க அவளது தந்தை நிற்கும் படம் வெளியாகி, காண்போரை கண் கலங்கச் செய்துள்ளது.

இப்போது, தன்னுடன் மகள் வாழ ஆசைப்பட்ட இடத்திலேயே அவளைப் புதைப்பதற்காக, அவளுக்கு Long Islandஇல் ஒரு கல்லறை வாங்க முடிவு செய்துள்ளார் Manuel.