சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 11 பேர் பலி!

சீனாவில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் பலியாகினர்.

சீனாவின் சிசுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று (திங்கள் கிழமை) இரவு 10.55 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. 2வது நிலநடுக்கம் இன்று காலை மீண்டும் ஏற்பட்டது. நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.

அடுத்தடுத்த இரு நிலநடுக்கங்களால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்தனர். உயரமான கட்டிடங்களில் இருந்த மக்கள் கட்டிடம் குலுங்கியதை அடுத்து, அலறியடித்தபடி வீதிகளுக்கு வந்தனர். சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நீடித்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 122 பேர் காயம் அடைந்தனர். அண்டை மாநிலமான யுனான் மாகாணத்திலும் நிலநடுக்கத்தின் அதிர்வுகளை உணர முடிந்ததாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.