உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து, முகத்தை மூடும் புர்காவிற்கு அரசாங்கம் தடைவிதித்திருந்தது.
இன் நிலையில் ஹோமாகம தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் இளம் பெண் முஸ்லிம் வைத்தியர் ஒருவர், புர்காவை கழற்ற மறுத்து வைத்திய தொழிலில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியரான இவர், ஹோமாகம வைத்தியசாலையில் இணைப்பு கடமையாற்றி வருகிறார்.
புர்காவுடன் கடமையிருந்த இவரை பார்த்து அச்சமடைந்த நோயாளியொருவர், இவரிடம் சிகிச்சை பெற மறுத்திருந்தார்.
இதையடுத்து, புர்காவை கழற்றும்படி வைத்தியசாலை பணிப்பாளர் உத்தரவிட்டிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த வைத்தியர், மே மாதம் 2ஆம் திகதி வரையில் வைத்தியசாலைக்கு சமூகமளிக்கவில்லை.
2ம் திகதி வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரிக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு தனக்கு சுகயீனம் என்று அறிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியான ஜே. ஹெட்டியாராச்சி இதுபற்றி விளக்கமளிக்கையில், இச்சம்பவம் எமது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதோடு, அவர் சில நாள்கள் பணிக்கு வருகை தராதிருந்த நிலையில், தான் பணியியை இராஜினாமா செய்துக்கொள்வதாக இராஜினாமா கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளாரென்றும் எனினும் அக்கடிதத்தை தாம் இன்னமும் பொறுப்பேற்றுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
மேல் மாகாண ஆளுனர் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன புர்கா தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.