சீனாவில் தாறுமாறாக ஓடிய கார் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்து!

சீனாவில் வீதியில் நடந்து சென்றவர்கள் மீது காரால் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலத்த காயமடைந்து ள்ளனர். அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தியான்கே மாவட்டத்தில் இன்று காலை கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அங்கிருந்த சிக்னலில், சிகப்பு விளக்கு எரிவதை பொருட்படுத்தாத கார் ஓட்டுநர், சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார்.

பின்னர் எதிரே வந்த இரு வாகனங்கள் மீதும் கார் மோதி நின்றது. இதில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 13 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

அதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து கார் ஓட்டுநரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீனாவில் சமீப காலங்களில் தங்களது சுய கோபங்களுக்காக மக்களை கத்தியால் குத்துவது, மக்கள் மீது வாகனங்களை மோதி விபத்துக்குள்ளாகுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.