இனி இந்த நாட்டில் ஆணும், ஆணும்… பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்யலாம்: புதிய சட்டம் அமல்

ஆசியாவிலே ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக உருவெடுத்துள்ளது தைவான்.

வெள்ளியன்று தைவானின் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பைத் தொடர்ந்து ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் இச்சட்டத்தை அமுல்படுத்தியவுடன் அது நடைமுறைக்கு வரும்.

2017 ஆம் ஆண்டில், தைவானின் அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரே பாலின ஜோடிகளுக்கு சட்டப்பூர்வமாக திருமணம் செய்ய உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தது. சட்டத்தில் மாற்றம் கொண்டு வர பாராளுமன்றத்திற்கு இரண்டு வருட காலக்கெடுவை வழங்கியது.

இந்நிலையில், தைவான் பாராளுமன்றத்தில் இச்சட்ட மசோதா மீதான வாக்கொடுப்பு நடந்தது, இதில் 66 பேர் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது தைவான். இச்சட்டத்திற்கு எதிராக 27 பேர் வாக்களித்தனர்.

மசோதாவின் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கொட்டும் மழையில் வானவில் நிற கொடியுடன் நூற்றுக்கணக்கான ஓரின சேர்க்கை உரிமைகள் ஆதரவாளர்கள் தலைநகரான தைபேவில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே கூடி மகிழ்ச்சி ஆரவாரம் மற்றும் ஆனந்த கண்ணீரில் திகைத்தனர். மேலும், பலர் இச்சட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.