ஐந்து பிள்ளைகளை கொடூரமாக கொன்ற தந்தை: அதிரவைக்கும் கடிதம்!

அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் சொந்த பிள்ளைகள் ஐவரை கொடூரமாக கொலை செய்த நபரின் குடியிருப்பில் இருந்து பொலிசார் அதிரவைக்கும் கடிதம் ஒன்றை மீட்டுள்ளனர்.

தென் கரோலினா மாகாணத்தில் குடியிருக்கும் திமோதி ஜோன்ஸ் ஜூனியர் என்பவரே சொந்த பிள்ளைகளை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்.

ஒரு பிள்ளையை அடித்துக் கொன்ற திமோதி, எஞ்சிய நால்வரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டுமின்றி பிள்ளைகளின் சடலங்களை பிளாஸ்டிக் பைகளில் பொதிந்து தனது வாகனத்தில் ஒரு வார காலம் நகரம் முழுவதும் சுற்றி வந்துள்ளார்.

தொடர்ந்து அலபாமா பகுதியில் உள்ள மலைப்பிரதேசம் ஒன்றில் ஐந்து பிள்ளைகளின் சடலங்களையும் புதைத்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், திமோதியின் குடியிருப்பில் இருந்து அதிரவைக்கும் நாட்குறிப்புகளை கைப்பற்றியுள்ளனர்.

அதில் சடலங்களை எவ்வாறு உருச்சிதைப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கலை அவர் சேகரித்து குறித்து வைத்துள்ளார்.

ஒரு குறிப்பில், உடல்களை மொத்தமாக கரைக்க வேண்டும், எலும்புகளை தூளாக்க வேண்டும் அல்லது உடைத்து சிறு துண்டுகளாக மாற்ற வேண்டும் என கைப்பட குறித்து வைத்துள்ளார்.

இன்னொரு குறிப்பில், முதல் நாள் உடல்களை எரியூட்ட வேண்டும், இரண்டாவது நாள் எலும்புகளை மண்ணில் புதைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

2014 செப்டம்பர் மாதம் மது போதையில் வாகனம் ஓட்டியதாக கூறி பொலிசாரால் திமோதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அமெரிக்காவை நடுக்கிய அந்த தகவல் அம்பலமானது.

இவரது வாகனத்தை சோதனையிட்ட பொலிசார், அந்த வாகனம் முழுவதும் மரணத்தின் வாசனை எழுந்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

37 வயதான திமோதி ஜோன்ஸ் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். ஆனால் திருமண முறிவுக்கு பின்னர் தனது 5 பிள்ளைகளையும் காப்பாற்றும் பொறுப்பு நீதிமன்றத்தால் திமோதியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒருகட்டத்தில் தமது பிள்ளைகளை கொடூரமாக தண்டிக்க துவங்கிய திமோதி, பின்னர் கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.