பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது மகள்களை வெளியில் சென்று விளையாட அனுமதிக்க மாட்டேன் என்று கூறியதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஷாகித் அப்ரிடி ‘The Game Changer’ என்ற தனது சுயசரிதை புத்தகத்தை எழுதியதில் இருந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்திய வீரர் கவுதம் காம்பீரை வம்பிழுத்தது, பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்கள், தான் ஆடும் காலத்தில் எப்படி தன்னை அவமதித்தனர் என்று கூறியது ஆகியவை சர்ச்சைகளை கிளப்பின.
இந்நிலையில் தனது மகள்கள் குறித்து, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட விடயம் கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது. அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில், ‘என் மகள்கள் கிரிக்கெட் ஆடுவதை மட்டுமல்ல, வெளியில் சென்று ஆடும் எந்த ஒரு விளையாட்டையும் அனுமதிக்க முடியாது.
பெண்ணிய விமர்சகர்கள் என் மகள் பற்றிய என் இந்த முடிவைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும், அது பற்றி கவலையில்லை. அவர்கள் வீட்டுக்குள், வெளியில் அல்லாமல் Indoor Games எதை வேண்டுமானாலும் ஆடலாம், நான் அனுமதிப்பேன்.
ஆனால், பொதுவெளி ஆட்டங்களுக்கு என் பெண்களுக்கு அனுமதி கொடுக்க மாட்டேன். கிரிக்கெட்டா? வாய்ப்பே இல்லை’ என தெரிவித்துள்ளார். அப்ரிடியின் 4 மகள்களும் விளையாட்டில் சிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால், வெளியில் சென்று அவர்கள் விளையாட அப்ரிடி அனுமதி தரவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், அப்ரிடியின் இந்த முடிவை ‘பிற்போக்கு தன்மை’ என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ரசிகர் ஒருவர், ஷாகித் அப்ரிடி ஒரு நடுவயது சராசரி பாகிஸ்தானியர். இவர் வேறு எந்த ஒருவர் மகள்களுடனும் செல்வார், ஆனால் தன் மகள்கள் அதை செய்தால் அனுமதிக்க மாட்டார் என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை அப்ரிடி அவமரியாதை செய்வதாக மற்றொரு ரசிகர் தெரிவித்துள்ளார். இம்முறை மகளிர் கிரிக்கெட் உலக அளவில் அடுத்த பெரிய விளையாட்டாக வரும் வேளையில், அப்ரிடியின் இந்த முடிவு கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.