இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் இருக்கும் தாயார் தொடர்பில் மகள் பகிர்ந்த பேஸ்புக் பதிவு கண்கலங்க வைத்துள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை நகரில் குடியிருக்கும் தேவான்ஷி என்ற இளம்பெண், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமது தாயார் தொடர்பில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், ஒரு தீபாவலி விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றதாகவும், தாயாரையும் தந்தையையும் நீண்ட நாட்களுக்கு பின்னர் நேரில் பார்க்கும் மகிழ்ச்சியில் இருந்ததாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.
தாயாரே தேவான்ஷியை கல்லூரியில் இருந்து அழைத்துவர சென்றுள்ளார். குடியிருப்புக்கு திரும்பும் வழியில் இருவரும் டீ அருந்தலாம் என முடிவு செய்துள்ளனர்.
படிக்கட்டுகள் ஏறிச் செல்கையில், தேவான்ஷியின் தாயார் கால் தடுமாறி அந்த படிக்கட்டுகளில் விழுந்துள்ளார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தந்தையை அழைத்து தகவல் அளித்துள்ளார் தேவான்ஷி.
சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அங்கே உடனடியாக கூடியுள்ளனர். ஆனால் எவரும் உதவ முன்வரவில்லை.
13 வயதான தம்மால் அப்போது என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் ஸ்தம்பித்து நின்றதாக கூறும் தேவான்ஷி,
இதனிடையே குற்றுயிராக கிடக்கும் தாயாரையும் தம்மையும் சிலர் உதவுவதாக கூறி மோசமாக தொட்டுள்ளனர்.
இந்த நிலையில், கூட்டத்தினிடையே இருந்த ஒருவர் தாயாரையும் தம்மையும் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளார்.
மருத்துவ சிகிச்சையின் ஒரு கட்டத்தில் தாயார் கோமா நிலைக்கு சென்றதன் பின்னர் தாம் மிகவும் தளர்ந்து போனதாகவும்,
பல மருத்துவர்களை சந்தித்ததாகவும் கூறும் தேவான்ஷி, ஒரு கட்டத்தில் இனி சிகிச்சையால் பலனேதும் இல்லை எனவும், உணவு தருவதை நிறுத்துங்கள், அவர் சாகட்டும் என மருத்துவர் ஒருவர் கூறியது தற்போதும் தமக்கு நினைவிருப்பதாக தேவான்ஷி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாயாரை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். தாயார் கோமாவில் இருந்து மீள்வார் எனவும், அவரை மீட்டுவர தங்களால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்ள இருப்பதாகவும் தேவான்ஷி தமது பேஸ்புக் பக்கத்தில் பதில் செய்துள்ளார்.