எனது தந்தை 3 வாரங்களாக கொழும்பு வைத்தியசாலையொன்றில் இருந்தார். நேற்று தன்னை தேவாலயத்துக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
இந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கையில், இவ்வாறான நிகழ்வுகள் எவ்வாறு இடம்பெற்றது என புரியாத புதிராகவுள்ளது.
எப்படியாக இருந்தாலும் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் கடுமையான தீர்மானத்துக்கு வரவேண்டியுள்ளோம். உரிய முறையில் கடமையை நிறைவேற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளோம் என்றார்.
இதேவேளை, இதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் ஏதாவது ஒரு வழிமுறையில் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால் இந்த பாதிப்பு நடந்திருக்க மாட்டாதென செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர், எனது தந்தை 3 வாரங்களாக கொழும்பு வைத்தியசாலையொன்றில் இருந்தார். நேற்று தனக்கு தேவாலயத்துக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறினார். எதையோ உணர்ந்திருக்கிறார்.
தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையிடம் தகவல்கள் இருந்துள்ளன, இவ்வாறிருக்கையில், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாதுள்ளது, தாங்கிக் கொள்ள முடியாத கவலையாகவுள்ளது.
இந்த நடவடிக்கையானது, தனது பொறுப்புக் குறித்து பொழுதுபோக்காக நடந்து கொண்டதன் ஒரு விளைவாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது என்றார்.