தலை துண்டிக்கப்பட்ட பெரியார் சிலை.!

இன்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அமைந்து இருந்த பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ”தேர்தல் களத்தில் தோல்வி பயம் கண்டவர்கள், அமைதியைக் குலைக்கும் வகையில் இழிவான செயல்களில் ஈடுபடுவது வழக்கம். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பது, அத்தகைய இழிவான செயல்களின் முன்னோட்டமாகத் தெரிகிறது. மிக மோசமான இந்தச் செயலை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது.

இத்தகைய செயல்பாடுகள் மூலம், தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டின் பொது அமைதியைக் குலைத்து, வன்முறையைத் தூண்ட நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கட்டாயமும் பொறுப்பும் தேர்தல் ஆணையத்திற்கு இருக்கிறது.

பெரியார் சிலையைச் சிதைத்த காலிகளை, காவல்துறை மூலம் கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாட்டில் வன்முறைக்குத் துளியும் இடம்தராத வகையில், அத்தகைய தீய எண்ணத்தில் இருக்கும் நாசகார சக்திகள் எதுவாக இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, இரும்புக் கரம்கொண்டு முறியடிக்கப்பட வேண்டும், நசுக்கப்பட வேண்டும்” என மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.