மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்!

திருமணமாகி எட்டு மாதமே ஆன நிலையில் மனைவியை கணவனே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் காந்தி தெருவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த எட்டு மாதம் முன்பு விக்னேஷ்வரி என்பவருடன் மாரியப்பனுக்கு திருமணம் நடந்தது.

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக மன இறுக்கத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழலில் மாரியப்பன், விக்னேஷ்வரியை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

ஆனால் தான் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிபோது தனது மனைவி விக்னேஷ்வரி படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சேலையூர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சேலையூர் பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்வதற்கு முன் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லையென கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.

பின் பொலிஸார் விசாரணையில் கடந்த சில மாதங்களாக மன இறுக்கத்துடன் காணப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்து, வழக்கு பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மீண்டும் மாரியப்பனிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது மாரியப்பன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

பின்னர் தான் தான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும், அதன்பின் தூக்கு போட்டது இறந்தது போல் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் இச்சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர்.பின் பல உண்மைகள் பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கும் ஒரு சில குடும்ப விஷயத்தில் மன இறுக்கம் இருந்ததால் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மாரியப்பன் மனைவியிடம் கடிதம் ஒன்றை எழுதி வாங்கிக் கொண்டு கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்து தூக்கிட்டு போல் நாடகமாடியுள்ளார்.

மேலும் பொலிஸாரிடம் சிக்காமல் இருக்க கடிதம் எழுதி வாங்கியுள்ளார் என்பது பொலிஸாரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. திருமணம் ஆகி 8 மாதங்கள் ஆன நிலையில் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.