அழுகிய நிலையில் இளைஞரின் சடலம்: இளம்பெண்ணின் உறவினர்கள் பகீர் வாக்குமூலம்

இந்திய மாநிலம் மராட்டியத்தில் காதல் விவகாரம் தொடர்பில் பெண்ணின் உறவினர்கள் இளைஞர் ஒருவரை கடத்தி சென்று கொலை செய்துள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது.

மராட்டிய மாநிலம் தானே பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்பேஷ் சவுதாரி என்ற 23 வயது இளைஞரே மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

தானே மாவட்டத்தின் அம்பர்நாத் பகுதியில் குடியிருக்கும் குறித்த இளம்பெண்ணுடன் கல்பேஷ் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

ஆனால் இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டுமின்றி குறித்த விவகாரம் தொடர்பில் இரு குடும்பத்தினரும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு, அது காவல்துறையினரால் புகாராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திடீரென்று கல்பேஷ் மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், வியாழனன்று முர்பாத் மாசே சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு அருகே புதரில் இருந்து அழுகிய நிலையில் கல்பேஷின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இளம்பெண்ணின் உறவினர்களே, கல்பேஷை கடத்திச் சென்று அடித்து கொன்றதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக இருவரை கைது செய்துள்ள பொலிசார், மூன்றாவது நபரை தேடி வருகின்றனர்.