யாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்டிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
கடந்த 15ம் திகதி தொலைபேசி ஊடாக இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பன் விழாவிற்கு செல்ல வேண்டாம் என்றும், மீறி சென்றால் அங்கு வைத்து கொல்லப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் திகதி அவருக்கு கொலை அச்சுறுத்தல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், கம்பன் விழாவிற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மறுநாள் 15ம் திகதி முதல்வரின் மனைவியின் வைபர் இலக்கத்திற்கு வந்த தகவலில், உயிருடன் இருக்க விருப்பம் இல்லையோ என்ற குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதுடன், தொலைபேசி வழியாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த 15ம் திகதி பொலிசாரின் கவனத்திற்கு இந்த விடயத்தை ஆனோல்ட் கொண்டு சென்றிருந்தார். பொலிசார் இந்த விடயத்தை தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக கேபிள் கம்பங்களை நட்டுவரும் நிறுவனத்திற்கு எதிராக, நடவடிக்கை எடுத்ததன் விளைவாக இந்த அச்சுறுத்தல் வந்ததா என்ற கோணத்திலும் ஆனோல்ட் தரப்பில் சந்தேகிக்கப்படுவதாக தெரிகிறது.