பொள்ளாச்சி விவகாரத்தில் பேஸ்புக், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து, ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும், பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா, சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் குறித்தும் சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்கள் மற்றும் படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனது. அதில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடைய வீடியோக்கள் பகிரப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.