உலககோப்பைக்கு பின் டோனி விளையாட வேண்டும்: கங்குலி

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு டோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியானது தற்போது அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியானது இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, வருகின்ற உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்று, அதேசமயம் டோனி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவர் ஓய்வு பெறக்கூடாது.

சிறப்பாக செயல்படும் போது ஏன் ஓய்வு பெற வேண்டும்? விளையாடுவதற்கு திறமை இருந்தால் போதும், வயது ஒரு தடையல்ல என கூறினார்.

மேலும், உலகக் கோப்பையில் இந்திய அணியில் பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள். அத்துடன் தற்போது ஃபார்மில் இல்லாத ஷிகர் தவானும் விளையாடுவார். என்னை பொருத்தவரை ரோகித் சர்மாவுடன் தவான் தான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என தெரிவித்துள்ளார்.