திமுகவின் உண்மை முகத்தை போட்டுடைத்த தமிழிசை!

சென்னை விமான நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 6ந்தேதி சென்னைக்கு வருகை தரவுள்ளார் என கூறினார்.

முதலில் மார்ச் 1ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு செல்கிறார். அதன்பின் சென்னைக்கு மார்ச் 6ந்தேதி வருகிறார். சென்னையில் நடைபெறும் பிரமாண்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்டு தொண்டர்கள் முன் பேசவுள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடம் பெற்று வலுவான கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்ப்பதற்கான முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டது. தே.மு.தி.க.விற்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டது என கூறினார்.

தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் எங்களுடன் நட்புணர்வோடு இருப்பதால், விரைவில் பாஜக – அதிமுக கூட்டணியில் இணையும் எனவும் தெரிவித்தார். பாஜக மாதவாத கட்சியல்ல. ஆனால் மதத்தின் பெயரில் கூட்டணி வைத்துள்ள திமுகதான் மதவாத கட்சி எனவும், தேர்தல் வரும் நேரத்தில் ஸ்டாலின் ஊராட்சி சபை என்ற பெயரில் நாடகமாடி வருவதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.