இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தில் லொறி புகுந்ததில், 13 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கார் மாவட்டத்தில் உள்ள நிம்பஹரே என்ற இடத்திலிருந்து பன்ஸ்வராவுக்கு திருமண ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த இந்த ஊர்வலம், ராம்தேவ் கோவில் அருகே வந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த லொறி ஊர்வலத்திற்குள் புகுந்தது.
எதிர்பாராத இந்த கோர விபத்தில், 4 குழந்தைகள் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சோட்டி சாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ராஜஸ்தான் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் சர் அசோக் கெலாட் கூறுகையில்,
’13 பேர் பலியான சம்பவம் தனக்கு மன வேதனையை அளித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.








