பயங்கரவாத தாக்குதல்: முகேஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரின் வா‌ழ்க்கை செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இந்த கொடூரத் தாக்குதலில் 44 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரின் வா‌ழ்க்கை செலவுகளை ஏற்க ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவன‌ம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தேசத்திற்காக உ‌யிர் நீத்தவர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக வீரர்களின் குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த விரும்புவதாக ரிலைய‌ன்ஸ் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

அதன்படி, வீரர்களின் குடும்பத்தினரின் கல்வி உள்ளிட்ட பல்வேறு செலவுகளையும் ஏற்கத் தயார் எனவும் காயமடைந்த வீரர்களுக்கு இலவசமாக சிகிச்சை தர ரிலையன்ஸ் குழும மருத்துவமனைகள் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.