வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக திமுக என்ற கட்சிகளுடன் பாமக கூட்டணி சேருமா என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2011-ல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று எடுக்கப்பட்ட முடிவினை 2018 பொதுக்குழுவில் தளர்த்தி இந்த மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்து தான் போட்டியிடுவோம் என பாமக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியதை அடுத்து இந்த பரபரப்பு உருவானது.
பொதுக்குழு நடைபெற்று ஒரு மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் எந்த கட்சியுடன் கூட்டணி பேசப்படுகிறது என்பதனை மட்டும் பாமகவினர் தெரிவிக்காமல் உள்ளனர். ஆனால் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும், அரசியல் செயல்பாட்டாளர்களும், விமர்சகர்களும் பாமக எந்த அணிக்கு போகும் என்று ஆளுக்கொரு ஆருடங்களை சொல்லிக்கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் ஒரு பேட்டி, மாலையில் ஒரு பேட்டி என திமுகவின் தோழமை கட்சி தலைவர் பாமகவை பற்றி பேசி வருகிறார்.
இதன் பின்னணியில் திமுக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் பாமக தங்களுடன் வரவில்லை என்றாலும், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளது. அதிமுகவுடன் பாமக கூட்டணி சேர கூடாது என திமுக நினைப்பதற்கு பலமான காரணமும் உள்ளது. ஏனெனில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிகப்பெரிய பலமே வட தமிழகம் தான். பலமுனை போட்டி இருக்கும் பட்சத்தில் திமுகவிற்கான வாய்ப்புகள் இருக்கும். தற்போது கலைஞர் இல்லாத திமுக தோல்வியுற்றால் இன்னும் பலவீனமடையும் என்ற எண்ணத்தில் பாமக அதிமுக கூட்டணி சேர விடாமல் தடுத்து விட்டால் வாக்குகளைப் பிரிக்கும் போது அதில் திமுக பலன் அடையலாம் என்ற எதிர்பார்ப்பு திமுகவிற்கு இருக்கிறது. 2014 இல் அதுவும் பொய்த்து போனது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அதிமுகவும் பாமகவும் கூட்டு சேர்ந்து விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக திமுக உள்ளது. இதனை கவனத்தில் கொண்டே தோழமை கட்சி தலைவரின் பேட்டிகளும் இருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வட மாவட்டங்களில் பலமான வாக்கு வங்கி வைத்துள்ள பாமக அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் அது அந்த கூட்டணிக்கு கூடுதல் பலன் கிடைக்கும். ஏனெனில் அதிமுக வன்னியர் மக்களை குறிவைத்து, வன்னியர் சொத்து நலவாரியம், சட்டசபையில் ராமசாமி படையாட்சியார் படத்திறப்பு, ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் போன்ற சில கவனத்தை ஈர்க்கும் செய்லகளை செய்துள்ளது.
இதனால் அதிமுக பாமக சேர்ந்துவிட்டால் வடக்கில் திமுக பலமான அடி வாங்கும் என்ற பயம் திமுகவிற்கு தொற்றிக் கொண்டு உள்ளது. இதனை தவிர்க்கும் நோக்கிலேயே பாமக அதிமுக கூட்டணி அமைந்து விடக்கூடாது என்பதற்காக தோழமை தலைவரை வைத்து ஸ்டாலின் காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் பாமக எந்த பக்கம் செல்லும் என்றே பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. இந்த திட்டம் எல்லாம் சக்ஸஸ் ஆகுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.