இறந்த தந்தை செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்ற மகன்!

பிரித்தானியாவில் 36 வருடங்களுக்கு முன்பு தந்தை செய்த பாலியல் குற்றங்களுக்காக, தன்னுடைய சகோதரனுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்துள்ளது என பெண் ஒருவர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இங்கிலாந்தின் நியூகேஸ்டல் பகுதியை சேர்ந்த எரிக் (58) என்பவர், 2011-ம் ஆண்டு பக்கத்து வீட்டில் இருந்த பூத்தொட்டியில் சிறுநீர் கழித்துள்ளார்.

அதனை வைத்து பொலிஸார் டி.என்.ஏ சோதனை மேற்கொண்ட போது, 1983 மற்றும் 1988-ம் ஆண்டுகளில் 21 மற்றும் 18 வயதுள்ள இரண்டு பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்குடன் ஒத்து போனது.

மர்ம நபர் முகமூடி அணிந்து கொண்டு, அந்த பெண்களை தாக்கியிருந்ததால் இத்தனை வருடங்களாக கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் பெரிதும் திணறியிருந்தனர்.

35 வருடங்களுக்கு பின்பு டி.என்.ஏ மூலம் துப்பு கிடைத்ததால் பொலிஸார் எரிக்கை கைது செய்து கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி குற்றவாளிக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் பகீர் தகவலை வெளியிட்டுள்ள எரிக் சகோதரி எலைன் ஹட்டன், என்னுடைய தந்தை தாமஸ் 62 வயதில் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டார்.

அவர் தான் இந்த இரண்டு காரியங்களையும் செய்திருக்க வேண்டும். என்னுடைய சகோதரன் ஒரு அப்பாவி. என்னுடைய தந்தை ஒரு வன்முறையை ஏற்படுத்தும் நபராக இருந்தார். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடந்துகொள்வார் என கூறியுள்ளார்.

இதற்கிடையில் எரிக் மனைவி, விரிவான விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.