அடித்து துரத்தப்பட்ட மனைவி! ஆசிரியர் செய்த கொடுமையான செயல்!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள நாராயணத் தேவன்பட்டி சேர்ந்தவர் மனோஜா (வயது 26). இவருக்கும் கூடலூர் எல்லைத் தெருவைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 30) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

பிரபாகரன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது திருமணத்தின் போது பெண் வீட்டார் 30 பவுன் நகை, ரொக்கப்பணம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை கருப்பாக இருந்ததால் கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் மனோஜாவையும், அவரது குழந்தையையும் திட்டி வந்தனர்.

மேலும் பிரபாகரனுக்கு 100 பவுன் நகையுடன் வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மனோஜாவிடம் கூடுதல் பணம் ரூ.3 லட்சம் வாங்கி வரச் சொல்லி அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டனர். இது குறித்து மாவட்ட காவல் சூப்பிரண்டிடம் மனோஜா புகார் அளித்தார். விசாரணை நடத்துமாறு அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

அதன் பேரில் அனைத்து மகளிர் காவல் துறையினர் மனைவியை கொடுமைபடுத்திய ஆசிரியர் பிரபாகரன், அவரது பெற்றோர் மொக்கராஜ், ஜெயா, உறவினர் சங்கீதா ஆகிய 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.