கடன் சுமையில் தத்தளித்த பெண்: மில்லியனராக மாற்றிய பத்து பவுண்டுக்கு வாங்கிய மோதிரம்…

பிரித்தானியாவில் கடும் நிதிச்சுமையில் தத்தளித்த பெண் ஒருவர் 10 பவுண்டுக்கு வாங்கிய மோதிரம் அவரை மில்லியனராக மாற்றியுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்கு லண்டனில் ட்விக்கன்ஹாம் பகுதியில் குடியிருந்து வரும் 55 வயது பெண்மணியே 10 பவுண்டுக்கு வாங்கிய மோதிரத்தால் இன்று மில்லியனராக மாறியுள்ளார்.

தற்போது 55 வயதாகும் டெப்ரா கோடார்ட் என்பவர் 33 ஆண்டுகளுக்கு முன்னர் 10 பவுண்டுகளுக்கு கண்ணாடி மோதிரம் ஒன்றை ஏலத்தில் வாங்கியுள்ளார்.

இதனிடையே உறவினரின் சூழ்ச்சியால் டெப்ராவின் தாயார் கடனில் தத்தளித்த நிலையிலும் தாம் வாங்கிய கண்ணாடி மோதிரத்தை பாதுகாப்பாக ஒரு பெட்டிக்குள் வைத்து பாதுகாத்து வந்துள்ளார் டெப்ரா.

33 ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது தொண்டு நிறுவன ஊழியராக செயல்பட்டுவரும் டெப்ரா கோடார்ட் நிதி நெருக்கடி காரணமாக அந்த மோதிரத்தை விற்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து ஒரு நகைக்கடையில் அந்த மோதிரத்தின் மதிப்பை அறிய எடுத்துச் சென்றுள்ளார்.

பழமையான மோதிரம் என்பதால் தற்போது 750 பவுண்டுகள் வரை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்துள்ளது.

ஆனால் அந்த மோதிரமானது 26.27-காரட் ரத்தினம் எனவும் அதன் மதிப்பு சுமார் 740,000 பவுண்டுகள் என்ற தகவலை அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளார்.

இதனையடுத்து அவர் குறித்த மோதிரத்தை ஏலத்தில் விட முடிவு செய்து, ஏலத் தொகை போக அவருக்கு 470,000 பவுண்டுகள் கிடைத்துள்ளது.

தமது தாயார் உறவினர்களால் ஏமாற்றப்பட்டு கடனில் மூழ்கிய நிலையில் தங்கள் குடும்பம் மிகவும் பரிதவித்ததாகவும்,

ஆனால் அதற்கான பலனை தற்போது கடவுள் தங்களுக்கு அளித்துள்ளார் எனவும் டெப்ரா கோடார்ட் தெரிவித்துள்ளார்.