யாழ் நோக்கி வருகின்றது புதிய தொடரூந்து…!

கிளிநொச்சி மாவட்டம் அறிவியல் நகர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் உப தொடருந்து நிலையம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் காங்கேசன்துறை-கொழும்பு தொடருந்து மார்க்கத்தில் புதிய தொடருந்து ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இலங்கை தொடருந்துத் திணைக்களம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த புதிய S13 எனும் தொடருந்து உத்தரதேவி சேவையாக கொழும்பு-யாழ்ப்பாணம்-காங்கேசன்துறை இடையில் சேவையினை ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடருந்து சேவை மேற்படி அமைச்சரால் மருதானை ரயில் நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் அதே தொடருந்தில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க யாழ்ப்பாணதை நோக்கி வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது, அறிவியல் நகரில் அமைக்கப்பட்ட தொடருந்து நிலையம் அமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக, கிளிநொச்சி வளாகம் மற்றும் கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலை ஆகியனவற்றின் அருகில் இந்த தொடருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருந்து நிலையத்தில் உத்தரதேவி, யாழ்தேவி, இரவு நேர தபால் தொடருந்து ஆகியன நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.