மதுபோதையில் நபரொருவர் செய்த செயல்!

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் பகுதியில் கடை ஒன்றின் பின்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு எரித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, பாண்டியன்குளம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு பின்னால் தனது மோட்டார் சைக்கிள் ஒன்றை அதன் உரிமையாளர் நேற்றிரவு நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து மற்றொரு மோட்டார் சைக்கிளில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் குறித்த சைக்கிளை தீயிட்டுக் எரித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிவது தொடர்பில் அவதானித்த அதன் உரிமையாளர் சம்பவ இடத்துக்கு ஓடிச் சென்றபோது அந்த இடத்திலிருந்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

அதன் பின் குறித்த நபரை பின்தொடர்ந்து துரத்தி சென்ற போது அருகிலுள்ள வீட்டுடன் கூடிய மற்றுமொரு வர்த்தக நிலைய வளாகத்துக்குள் நுழைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மல்லாவி பொலிஸ் நிலையத்துக்கு இன்று அதிகாலை சென்று தனது முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் இன்று பிற்பகல் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபரை நபரை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.