பிரித்தானியா பிரதமர் தெரேசா மே முன்னெடுத்த பிரெக்ஸிற் ஒப்பந்தமானது 230 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
பிரித்தானியா அரசியல் வரலாற்றில் ஆளும் அரசு எதிர்கொள்ளும் மாபெரும் தோல்வி இதுவெனவும் கணக்காக்கப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 432 உறுப்பினர்கள் வாக்களித்துள்ள நிலையில் 202 வாக்குகள் பிரெக்ஸிற் ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இந்த நிலையில் தொழிலாளர் கட்சி தலைவர் Jeremy Corbyn நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை பிரித்தானியா எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நீண்ட ஒருவார கால விவாதத்திற்கு பின்னர் பிரெக்ஸிற் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.
குறித்த வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வரலாற்று தோல்வியை எதிர்கொள்ள நேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவிருந்த பிரெக்ஸிற் வரைவு மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு, நிராகரிக்கப்படலாம் என்ற அச்சத்தில் பிரதமரால் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் இன்றைய தினம் நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் தெரேசா மே ஆதரவு உறுப்பினர்கள் உள்பட பெரும்பாலானோர் பிரெக்ஸிற்கு எதிராகவே வாக்களிக்கலாம் என்றே நம்பப்படுகிறது.
பிரித்தானியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதையே விரும்புவதாகவும் பிரெக்ஸிற் தொடர்பான இறுதிமுடிவை தாங்களே தீர்மானிக்க விரும்புவதாகவும் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 29 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறவுள்ள நிலையில் வெவ்வேறு கட்சிகளை சார்ந்த 200 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்க்குமாறு கோரி பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது தமது வரைவு நிராகரிக்கப்பட்டால் பிரித்தானியா நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்க நேரிடுமென பிரதமர் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.






