போதையில் வாலிபர் அடித்து கொலை!

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் குடிபோதையில் லேத் பட்டரை ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி மகன் ரத்தினசாமி.  பட்டணம் பகுதியிலுள்ள தாட்கோ லேத் ஒர்க்‌ஷாப்பில் ஊழியராக பணியாற்றும் இவர், அவ்வப்போது தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடிந்து வீட்டிற்கு செல்லாத ரத்தினசாமி, இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலத்திற்கு அடியில் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த பீளமேடு போலீசார், இது தொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்தி, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சடலமாக கிடந்த ரத்தினசாமியின் அருகே ரத்தக்கரையுடன் கிடந்த உருட்டு கட்டை ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், குடி போதையில் இருந்த ரத்தினசாமி போதை ஆசாமிகளால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.