கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு அமைச்சர் பதவி கிடைக்காததால் அடிக்கடி போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால் கூட்டணி ஆட்சிக்கு அவ்வப்போது நெருக்கடி நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கர்நாடக அமைச்சராவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அமைச்சராவையில் இருந்து 2 பேர் நீக்கப்பட்டு புதிதாக 8 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அமைச்சராவையில் விரிவாக்கம் செய்த மறுநாளே, கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று பா.ஜ.க தலைவர்கள் கூறி வந்தனர்.
அமைச்சர் பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சுயேச்சை எம்.எல்.ஏ. சங்கரும் அதிருப்தியில் உள்ளார். அவர்களை இழுக்க பா.ஜ.க முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்களுடன் பா.ஜ.க நிர்வாகிகள் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரையும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவைக்க ஆலோசனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதனால் முதலவர் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அமைச்சரவை மீண்டும் மாற்றியமைக்கப்படும் என்று சித்தராமையா நேற்று அறிவித்தார். இது கர்நாடக அரசியலில் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.